Friday, February 14, 2014

அஜ்னபி கவிதைகள் 3

மழலை

ஒவ்வோர் இரவிலும்
ஒற்றை ஒற்றலில் விளக்கணைத்து
இடையூறு இல்லா இருளில்
உறங்கிப் பழகிய குழந்தை
தடுப்பூசி ஏற்றிய நாளின்
ஜுரம் கண்ட பகலில்
படுக்கைக்கு எட்டாத
ஒளி ஆளி நோக்கி
பிஞ்சுவிரல் நீட்டி
'இருட்டை போடு'
எனச் சிணுங்குகிறாள்
கண்களை உருட்டும் கரடிபொம்மையை
கட்டியணைத்தபடி..

*



பிரியம்

பிரியமானவர்களால்
விதந்துரைக்கப்படுகிற
பரிச்சயமில்லா அந்நியர் மீது
பறவையாய் மாறி
எச்சமிடத் தோன்றும்
இனந்தெரியாத வன்மம்
அம்மா தூக்கிக் கொஞ்சிய
அயலார் குழந்தைகளின்
மிருதுவான பாதங்களை
கமுக்கமாய்க் கிள்ளிவைத்த
பால்யத்தை நினைவூட்டுகிறது.

*



சுயம்

ஆரம்பப் பள்ளி மாணவனது
அளந்து எழுதுகிற வலது கை
எழுதி எழுதி மேற் செல்ல
அனிச்சை செயலாய் இடது கை
அட்டை கொண்டு மறைப்பதாய்
சுயநலச் சிறையின்
திரையிட்ட வாழ்வினூடே
போட்டிப் பரீட்சையென
சுமையாகிப் போயின
சுற்றமும் சூழலும்..

*

ஓரிரு வரிகளெழுதி
கைவிடப்பட்ட விடைகள்..

எட்டிப் பார்த்தெழுதிய
இரவல் கணக்குகள்..

இவை தவிர
ஊன்றியெழுதி
கிழிபட்ட தாள்களாய்
நட்பும் உறவும்..

*

எழுதிய கட்டுரையை
எழுத்தெண்ணி மீளாய்தல் போல்
பழம் நினைவுகளை மீட்டுவதில்
விரயமாகும் சில பொழுதுகள்..

*

தேர்வு நேரம் முடிந்து
தாள்கள் பறிக்கப்பட்ட பிறகான
அமர்முடுகல் தருணத்தில்தான்
உறைக்கிறது
சுட்டெண் எழுத மறந்தது...
சுயம் அங்கு தொலைந்தது...

*


தரு

பிற்பகலின் இளவெயில் மீது
பன்னீர் தெளித்துக்கொண்டிருந்தது
அந்தி மழை..

அருகாமை கட்டடத்தில் ஒதுங்கி
மற்றொரு தடவையும்
கொணர மறந்த குடையை
மானசீகமாய்க் கடிந்துகொண்டபோது
எதிர்ப்புறமாய் கேட்ட
எந்திர உறுமலை
வினாக்குறி தொக்க
விழி தொடரலானேன்..

ஊராட்சி பூங்காவில்
நெடுஞ்சாலைக்கு மிகச்சமீபமாய்
கிளைபரப்பி நின்ற,
யதேச்சையாகக்கூட அதுவரை
அவதானித்திராத,
அம் மாவைராட்சத எந்திரத்தின் தும்பிக்கை
வேரோடு பெயர்ப்பதை
ஜனத்திரள் ஊடே
வேடிக்கை பார்க்க நேர்ந்த
அக்கணத்தில் தான்
முதன்முதலாக―
மிகச்சரியாய் சொல்வதெனில்,
முதலும் கடைசியுமாக ―கண்டேன்..

நெஞ்சில் வடு தாங்கி
நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்த
விருட்சத்திலிருந்து
உதிர்ந்த காய்களைப்
பொறுக்கிக் கொண்டிருந்தான் ஒருவன்..

சற்றே தள்ளி
பூங்கா முன்றலில்
நிறுவப்பட்டிருந்த
நகரபிதாவின் சிலையின் மீது
எச்சமிட்டுப் பறந்தது
அவசரப்பட்சியொன்று..

*



யட்சி

அகால யாமத்தில்
என் அலைபேசியை
ஆட்கொள்ளும் யட்சி நீ..

நடுநிசியில்தான்
நம் நகர்வலம்..
இல்லையில்லை,
சர்வலோக சஞ்சாரம்..

குறுந்தகவுகளில் அனுப்புகிற
முறுவல் குறிகளுக்கு
தெரிந்து கொண்டே
விளக்கம் கேட்கிறாய்..

சமயோசித பதில்கள் ஒற்ற
தாமதமாகிற நொடிகளில்
உன் 'தவறிய அழைப்புக்களில்'
திக்குமுக்காடித் திணறுகிறது
என் அலைபேசி..

இப்போதெல்லாம்
நாம் பேசித்தீர்த்த
வார்த்தைகளை விட
பேச நினைத்தவைதான்
நன்கு புரிகின்றன..

No comments:

Post a Comment