Thursday, April 19, 2012

பதிவுகள்




பதிவுகள்
 

அதிகாலைக்  கனவுகள் போன்றன 
நான் கொண்ட காதல்கள்...

முடிவு அறியுமுன்னமே 
விடிந்து விடுகிறது 
அல்லது 
விழிப்புத் தட்டி விடுகிறது... 
 *

எனது காதல்களும் 
நம் தேசத்துக் கல்வித்திட்டமும் 
சற்றேறக் குறைய சமம்..

தீட்டப்படுவதும் 
திருத்தப்படுவதுமாய்..

ஆனால்,
ஒவ்வொரு தடவையும் 
மதிப்பிடுதலில் தோல்வி தான்!
*
ஒவ்வொரு காதலின் போதும் 
உருவாக்கப் படுகிற 
பெயர்ச் சுருக்க  சங்கேதங்கள்  
ஆவர்த்தன அட்டவணையின் 
தனிமங்களை விட  அதிகம்..
*
எனது பிரத்யேக காதல் மொழி 
ஒலி வடிவத்துக்கு ஒத்து வராமல் 
வரி வடிவத்தில் மட்டுமே 
வார்த்தைகள் கோர்ப்பது... 

தினக் குறிப்புகளின் ஏடுகளில் 
மௌனமாய்  உறைகிறது  
இன்னும்
குட்டி போடாத 
பால்யத்தின் மயிலிறகுகளுடன்..  
*

நேற்றைய   காதல்கள்
அற்ப ஆயுளில் முடிந்து போயினும் 
அத்தனை சுலபமாய் 
அழிவதில்லை 
அவைதம் சுவடுகள்...
 *

சரித்திரச் சான்றாவன 
வெளிப்படுத்திய காதல்கள் 

கடிதங்களாய்..
காவியமாய்..
கல்வெட்டாய்.. 
 *
எனில் 
சொல்லாத காதல்கள்..?

சூசகமாய் பதிவாகும்
மின்னஞ்சல் முகவரியின் 
கடவுச் சொல்லாகவேனும்!




ப்ரிய சகி

சகியே... 
உன் மீது கொண்ட 
எனதான ஸ்நேகம்
உயிர்கொல்லி காதலாய்
நிலை மாறியது எப்பொழுது?
*
சீருடையில் நிலவாக 
நீ குடை பிடித்து நின்றது 
சிற்பமாய் என் நெஞ்சில்
செதுக்கப் பட்ட பொழுதா?
*
கணக்கியல் புத்தகத்தின்
கடைசிப் பக்கங்களில்
அனிச்சையாய் உன் பெயர்
கிறுக்கப் பட்ட பொழுதா?
*
அர்த்த ராத்திரியில் 
அறை இருளில் அவஸ்தையாய்
கவிதை  எழுதவென
கண் விழித்த பொழுதா?
முன்நெற்றி முடிச்சையும் 
முந்தானை மடிப்பையும்
முழுசாக  உள்மனதில்
குறிப்பெடுத்த பொழுதா?
*
தெற்றுப்பல் தெரிய
தேன்மொழியாள் புன்னகைக்க 
தெவிட்டாத தித்திப்பில் நான் 
திளைத்த பொழுதா?
*
உனது வலது கன்னத்தில் 
மச்சமாய் ஜ்வலிக்கும் 
அந்த  ஒற்றைப்புள்ளி கண்டு 
எனது  முற்றுப்புள்ளிகள்
முடிவிலியாய் மாறிய பொழுதா
*
சுவாசத்தில் அக்னியும்
பார்வையில் ஈரமும்
ஒரு சேர உருவாகும்
முரண்பாட்டு விதிகள் 
முளைத்த பொழுதா
*
உனக்காக மட்டுமே 
எதிர் பார்த்துக் காத்திருந்த
என் ஞாபகப் பதிவேட்டில் 
நீ கோலமிட்ட பொழுதா?
*
உன் விழியீர்ப்பு ய்யம் 
எனை உள்வாங்கிக் கொண்ட
அந்த கடைசி நாள் சந்திப்பின்
கற்புள்ள நிமிஷத்தின் பொழுதா?
*
விடிந்தால் தேர்வு என்ற 
விறைப்பான ராத்திரியில் 
அறைகுறை ஆங்கிலத்தில் - நான்
அன்புமடல் வரைந்த பொழுதா?
*
ஆரம்பப் புள்ளி எது
அறுதியிட முடியவில்லை
சமாந்தரக் கோடுகளோ
சந்திக்க நேர்வதில்லை...
*
கண்டேன் - நீயே 
காட்சி என்றானாய் 
கேட்டேன் - நீயே 
இசையானாய்
ரசித்தேன் - நீயே
ருசி என்றானாய் 
முகர்ந்தேன் - நீயே
 (ஸ்)வாசமென்றானாய்
நினைத்தேன் - நீயே 
வலியும், ஆனாய்... 
********




சீருடையில் நிலவு..
சிகை முடிக்க நக்ஷத்ரம்..
மழை ஓய்ந்த வானமாய்
மனசு மட்டும் வெறுமையாய்....
********


ஸ்தூலம் ப்ராணம்
ஸ்நேகம்  ரோகம்
ஸ்பர்ஷம் விஷம்
ஸ்படிக துல்யம்
ஸ்வர்க்கம் நரகம்
ஸ்தல ப்ரத்யட்சம் 

********
*

No comments:

Post a Comment